Tuesday, May 17, 2011

விசில் ஊதும் புகார்

விசில் ஊதும் புகார்

நம்மில் பலருக்கு ஊழல் குறித்து விவரம் தெரிய வரும்; ஆனால், அரசின் மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்தால் அல்லது ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு, புகார் செய்தால் மாட்டிக் கொள்வோம் தம்மை தொல்லைக்கு ஆளாக்குவார்கள் என்று அஞ்சி, புகார் கொடுப்பதில்லை. தன் கண் முன்னே அநியாயம் நடந்தும் நாம் ஒன்றும் செய்ய முடியாமல் போனோமே என்று இறக்கும் வரை மனதுக்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருப்போம்..

இது போன்ற சமயங்களில், புகார் செய்பவரின் பெயர் விவரங்கள் வெளியே வராது, ரகசியமாகக் காக்கப்படும் என்று உறுதி அளித்து ஏற்கப்படும் புகார்கள் விசில் ஊதும் புகார் என்பதாகும்.( WHISTLE BLOWER COMPLAINT). (PUBLIC INTEREST DISCLOSURES AND PROTECTION OF INFORMER - PIDPI)

ஓர் ஊழலின் சிறிய பகுதி நம் முன்னே நிறைவேறி இருக்கலாம். உதாரணமாக, ஒரு புறம்போக்கு நிலத்தை பூங்கா அமைப்போம் என்று ஒரு தொண்டு நிறுவனம் கேட்கலாம்; அதற்கு தேவையான ஆவணங்களில் ஒன்று/இரண்டு குறையலாம்; ஆனால், அனுமதிக்கும் அதிகாரி, முழு விவரம் தெரியாமலோ, அல்லது சுட்டிக் காட்ட வேண்டிய அலுவலர் தம் பணியை செய்யாததாலோ , பெரிய இடத்து அழுத்தம் காரணமாகவோ, அல்லது வேறு விதங்களில் வாய் அடைக்கப் பட்டோ இருக்கலாம். இதில் நம் பங்கு ஒன்றும் இருக்காது; நாம் இதை தடுக்க நம் கையில் அதிகாரம் இல்லையே, புகார் எவ்வாறு செய்வது என்று எண்ணுபவர்களுக்கு விசில் ஊதும் புகார் சரியான வழி.

பூங்காவுக்காக பெற்றுக்கொண்டு, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, அதில் ஒரு பகுதியில் குடியிருப்புக்கள் கட்ட அனுமதி கேட்கலாம்; வருமான வரி கட்டிய சான்று/விலக்கு சான்று, நில உச்ச வரம்பு ஆவணம், பல அடுக்கு மாடி கட்டும் போது விமான தளம் சார்ந்த உயர விதி முறைகள், டாஸ்மாக் உரிமம் வழங்கும் போது அருகில்மசூதி உள்ள தூரம், திரை அரங்குகளில் கழிப்பறை அமைப்பு விதிகள், பேருந்துக்கு உரிமம் (சங்கரின் இந்தியன் திரைப் படம் நினைவுக்கு வரலாம்) என்று பல நிகழ்வுகள் நம் கண் முன்னே நடக்கலாம். ,

இது போன்ற சமயங்களில், விசில் ஊதும் புகார் அனுப்புங்கள். தகவல் கொடுத்தது யார் என்று தெரியவரும் அச்சம் இல்லாமல் விசில் ஊதும் புகார் தரவும்.

P I D P I புகார் எப்படி அனுப்புவது?
# தெரிந்த விவரங்களை வரிசைப்படுத்தி வெள்ளைத்தாளில் எழுதவும்
# சுற்றி வளைத்து சொல்லாமல் நேரடியாகச் சொல்லவும்
# விவரங்கள் - தெரு, சர்வே எண், தேதி/மாதம் முதலிய விவரங்கள் தெரிந்தவரை சரியாக கொடுக்கவும்.
# இந்த கடித்தத்துடன், ஒரு வெள்ளைக் காகிதத்தில், உங்கள் பெயர் , முகவரி, தொலை பேசி எண் தரவும்.
# மேல் விவரம் எதாவது தேவை என்றாலோ, இது அநாமதேயக் கடிதம் இல்லை என்று உறுதி செய்து கொள்வதற்காகவோ தொடர்பு கொள்ள இந்த விவரம் அவசியம்.
# இதை உறைக்குள் வைத்து, மூடி, உரையின் மேல் WHISTLE BLOWER COMPLAINT (OR) P I D P I COMPLAINT என்று எழுதவும்
# இந்த உறையை இன்னொரு உறைக்குள் வைத்து, உறையின் மேல், Whistle Blower Complaint என்று எழுதி,
Central Vigilance Commission
A-Block
CGO Complex
I N A
New Delhi 110 023
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இது போன்ற புகார்கள், மைய அரசு, மாநில அரசு அலுவலகங்களைப் பற்றியும் அரசு நிறுவனகள், அரசுடைமை வங்கிகள் குறித்து இருக்கலாம்.

ஒரு புகார் அனுப்பிய பிறகு, அது குறித்து எந்த கடிதத்திலும் இது குறித்து சுட்டக்கூடாது. Reminder அனுப்பக் கூடாது. இவ்வாறு செய்தால், விவரம் ரகசியமாக காப்பது கடினம் என்பதால் இந்த வரைமுறைகள். அரசு இயந்திரம் செயல் பாடு முறைகள் காரணமாக கால தாமதம் ஆகலாம்; ஆனால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல் அறியும் உரிமை சட்டம் உள்ள அளவுக்கு இந்த விசில் ஊதும் புகார் குறித்து பொது மக்களுக்கு தெரிய வர வில்லை என்பதால் இந்த பதிவு.